நினைவுகளின் அடுக்கில் இருந்து - பொங்கல்
மார்கழி கடைசி நாள் காப்புக் கட்டு. பொம்பளைங்க வீடு சுத்தம் பண்றதுக்குள்ள, அரை டிக்கெட்டுங்க நாங்க காப்புக் கட்ட பூலாப் பூ, மாவிலை, ஊணாங் கொடி, பண்ணைப் பூ, வேப்ப இலை தேடி காடு மேடெல்லாம் சுத்துவோம். மீதி எல்லாம் கிடைச்சாலும் இந்த பூலாப்பூ மட்டும் காட்டுக்கு போனாத்தான் கிடைக்கும். பூலாப்பூ தேடி காட்டுக்கு போய் அதை மறந்து குதியாட்டம் போட்டுட்டு வெறுங்கையோட வீட்டுக்கு வந்து மாத்து வாங்குறதும் நடக்கும். அவனவனுக்கு பிரியமான கன்னுக்குட்டியையோ, ஆட்டையோ குளிப்பாட்டி, பப்பாளி இலை தண்டை சாயப்பொடில நனைச்சு உடம்பு முழுக்க குத்தி சும்மா புள்ளிமான் கணக்கா மாத்தி வைப்போம். "மாட்டுக்கும், ஆட்டுக்கும் மட்டும்தான் அலங்காரமா?"-ன்னு ஏக்கமா பாக்குற நாய்க்கும் சில நேரம் புள்ளி குத்திடுவோம்.
தை மொத நாள் பெரும் பொங்கல். ஊர்ல நிறைய நிலம் வச்சிருக்கவங்கதான் பெரும்பாலும் வீட்டுப் பொங்கல் பெருசா வைப்பாங்க. பெரும் பொங்கலுக்கு அடுப்புக் குழி வீட்டு வாசல்லதான் வெட்டுவாங்க. போன வருசக் குழியை மூடும் போது போட்ட 10 காசோ, நாலணாவோ யார் கைல கிடைக்கும்?-ன்ற போட்டில குழி நோண்டுற மண்ணை கோழி மாதிரி சீய்ச்சுத் தள்ளிடுவாங்க பசங்க. கால் ஏக்கர், அரை ஏக்கர் வைச்சிருக்கிறவன், அதுவும் இல்லாதவங்க வீட்டுல உள்ளடுப்புலயே பொங்கல் பொங்கிரும்.
ஆனா ரெண்டாம் நாள் செய்யுற பட்டிப் பொங்கல் அப்படியில்லை. வீட்ல ஒத்தை பால் மாடு இருக்கிறவன் கூட இரண்டு, மூனு வீட்டுக்காரங்களோட சேர்ந்து பட்டிப் பொங்கல் விடுவாங்க. மாடோ, ஆடோ, இல்லை எருமையோ எதுவானாலும் அன்னைக்கு தோரண வாசல்-ல நுழைஞ்சு வந்தாகனும். இல்லாட்டி வர்ர வருசம் செழிப்பா இருக்காது-ன்னு ஒரு நம்பிக்கை. வடக்கு தெற்கா கம்பம் நட்டு, அதுல 2 கரும்பு, மஞ்சள் செடி கட்டி, கிழக்கு பார்த்த மாதிரி வைக்கபுல்லு பிரியில் மாவிலை தோரணம் கட்டி இருக்கும். தரையை சுத்தம் பண்ணி பரப்புன வாழை இலை மேல பொங்கச் சோறு, பூசணிச் சாறு, தயிர், நெய், வெல்லம் போட்டு தளுவி. "பொங்கலோ பொங்கல், பொலியோ பொலி"-ன்னு சுத்தி வந்து சூரியனுக்கு பூஜை. முடிஞ்சதும் தளுவி சோத்தை பிசைஞ்சு புடிச்ச உண்டை. உண்டைன்னா திருப்பதி லட்டு மாதிரி ஒரு கைல புடிக்கிற அளவில்லை, சும்மா போச்சம்பள்ளி வெல்லம் மாதிரி இரண்டு கைல புடிச்சாலும் கொள்ளாது! மாட்டுக்கு ஊட்டுன கையோட நமக்கும் ஒரு உருண்டை. அப்புறம் மாடுங்களை தோரண வாசல் வழியா விரட்டி விட்டோம்-ன்னா அதுங்க சாயங்காலம் தண்ணி குடிக்கத்தான் வீட்டுக்கு வரும். அழிகொல்லைக் காலம்ங்கறதால யார்வீட்டு கொல்லைலயாவது மேஞ்சிடும்-ன்ற பயம் இல்லை.
மூனாம் நாள் எருது கட்டுக்கு டுர்ரி காட்ட துணி கட்டுற கோலும், ஓட்டை சட்டி கவுக்க சோள மோட்டும் பல நாளுக்கு முன்னாடியே சேக்க ஆரம்பிச்சிருப்போம். காத்தால ஆடறுக்க தாத்தா கூட போனா, ஆட்டு தலை சுடுறப்ப காதை உருவி சுடச் சுட வாய்ல போடுவார். சுட்ட ஆட்டு மண்டையை உடைச்சு ஆட்டு மூளையை சூடு ஆறுறதுக்கு முன்னாடியே உள்ளங்கைல போட்டு பல்லு படாம ஒரே உரிஞ்சு! அப்படியே ஒரு ரவுன்டு அடிச்சிட்டு வீட்டுக்கு வந்தா இரத்தப் பொரியலோட சுடச்சுட இட்லி இல்லாட்டி தோசை. அதை தின்னுட்டு அங்க இங்க ஆடிட்டு வந்தா மத்தியான சோத்துக்கு கறி சாறும், சோறும் வா, வா-ன்னு கூப்பிடும். சாயங்காலம் மந்தை வீதிக்கு போனா மாடோட்டத்தை பாக்க ஊரே கூடி நிக்கும்.
எருது கட்டுக்கு நல்ல பாய்ச்சல் இருக்குற எருதா 3 எருது புடிப்பாங்க. கழுத்து கவுத்துல வடக்கயிறு போட்டு முன்னால 5ஆளு, பின்னால 5 ஆளுன்னு புடிப்பாங்க. ஒரு பக்கம் இருக்குறவங்களை முட்டப் பாயும்போது மறுபக்கம் இருக்குறவங்க இழுத்து புடிக்கனும். கோல்ல துணியை கட்டி டுர்ரி காட்டுனா காட்டுற ஆளை பாயுறதுக்கு எருது சும்மா துள்ளிட்டு வரும். வந்த வாக்குல முன்னாடி சோள மோட்டுல கவுத்து வைச்சிருக்கிற சட்டியை தூக்கி ஒரே வீசு! சட்டி 10 அடி மேல் பறக்கும். புள்ளா(ர்) சாமி இருக்க உச்சி மரத்தை 3 சுத்து சுத்தி வந்தா எருதை அவுத்து விட்டுடுவாங்க. அப்புறம் அடுத்த எருது, இதே மாதிரி 3 சுத்து.
சாயங்காலம் சின்ன பசங்க, புள்ளைங்களுக்கு ஓட்டப் பந்தயம், மியூசிக்கல் சேர் போன்றவையும், வயசுப் பொண்ணுங்களுக்கு ஊசி நூல் கோக்குறது, எலுமிச்சை ஸ்பூன் ஓட்டம் மற்றும் வயசுப் பசங்களுக்கு ஸ்லோ சைக்கிள், கோணி சாக்கு ஓட்டம் போன்ற போட்டிகளும் நடக்கும். எல்லாம் அமைஞ்சு வர்ர வருசத்துல கபடி போட்டியும் நடக்குறது ( தவறாம சண்டையும்) உண்டு.இது எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு வரப்ப ராத்திரி 10 மணி ஆகிடும்.
அடுத்த நாள் பள்ளிக்கூடத்துக்கு போனா, யாராச்சும் ஒருத்தன் பைக்குள்ள விரல் தடிமனுக்கு இருக்கிற தோசையை கையெல்லாம் எண்ணையாகுற மாதிரி பிட்டு கமுக்கமா வாயில் போட்டுப்பான். கடலை எண்ணைல சுட்ட தோசை வாசனை வகுப்பெல்லாம் பரவும். வாத்தியார்"டே! நேத்து யார் வூட்ல என்னா பலகாரம்?"- ன்னு கேப்பார். தோசை, இட்லின்னு சொல்றவங்க ஏகப்பட்டவங்க. நெல்லுச் சோறு-ன்னு சொன்னவனும் உண்டு. "யார் வீட்டு மாடு எப்படி ஓடுச்சு? யார் மாட்டு கொம்புல பலகறை கட்டியிருந்தாங்க?"-ன்றது போன்ற அதி முக்கியமான விசயங்களெல்லாம் சில பல வாரங்களுக்கு அலசப்படும்.
காஞ்ச துவரஞ் செடி வாசமும், புங்கை இலை சருகும் அடுத்து வர்ர வெய்யில் காலத்துக்கு அச்சாரம். அதுக்கு முன்னாடி வர்ர முழுப் பரிச்சைக்கும் தான். :-)
அப்படியெல்லாம் கொண்டாடி மனசுல மறையாம இருக்க பொங்கல் இந்த வருசமும் கேஸ் அடுப்புல எவர் சில்வர் பாத்திரத்துல பொங்கி, போன்ல "ஹேப்பி பொங்கல்" சொல்லி, டீவில "இந்தியத் தொலைக்காட்சி களில் முதன் முறையாக..."அப்படின்னு முடிஞ்சிடும்.
Labels: experience, pongal, அனுபவம், பால்யம், பொங்கல்